மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஆட்டோ ஏற்றிக் கொலை மத்திய அரசு இன்னும் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவு.
ஜார்க்கண்ட் மாநில மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், வயது 49, கடந்த வாரம் மூன்று சக்கர வாகனமேற்றிப் படுகொலை செய்யப்பட்டார். ஓரமாக நடைபயிற்சி சென்றவர் மீது ஆட்டோவை மோதி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பான சம்பவத்தைக் குறிப்பிட்டு நீதிபதிகளுக்கு பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
என்.வி.ரமணா கூறியதாவது: மிகப்பெரிய வழக்குகளில் தங்களுக்கு ஆதாயமாகத் தீர்ப்பு வராவிட்டால் நீதித்துறையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நிறையச் செயல்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல், நீதிபதிகளின் செல்போன் என்களுக்கு மிரட்டும் தொணியில் குறுந்தகவல்கள் வருகின்றன. வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் மிரட்டல் விடுக்கப்படுகின்றன,
இத்தகைய அச்சுறுத்தல்கள் வரும்போது, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பீரோ ஆஃப் இன்டலிஜன்ட் போன்ற அமைப்புகளிடம் நீதிபதிகள் புகார் கூறினால், அவர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. உளவு அமைப்புகள் எப்போதுமே நீதிபதிகளுக்கு உதவியதில்லை. இதை நான் பொறுப்புணர்வோடு தான் சொல்கிறேன். இதற்கு மேலும் இதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இதில் ஏதாவது செய்தாக வேண்டும். இவ்வாறு அவர் மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதன்பின், இந்த மனு மீது மத்திய அரசு இன்னும் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்துகள்