ரூ.5,000 கேட்டு ரூ.3,500 இலஞ்சம் வாங்கி பணத்தை டாய்லெட்டில் போட்ட கூட்டுறவு வங்கியின் செயலாளர் கைது:
2 மணி நேரம் போராடி மீட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினர்
தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ்பாட்சாபேட்டையில் K.K. 140 அரூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நிலவள வங்கி) செயலராக முருகன்(வயது 50) பணிபுரிகிறார். இவ் வங்கியில், 1982 ஆம் ஆண்டில் அரூர் அருகே கோட்டப்பட்டி விவசாயி நாகராஜன் (வயது 57) டிராக்டர் வாங்குவதற்காக ரூபாய் 63 ஆயிரம் கடன் வாங்கியுள்ளதை 1987 ஆம் ஆண்டு திருப்பி செலுத்தி விட்டார். இரு தினங்களுக்கு முன்பு கடன் முடித்த NOC சான்றிதழை வாங்க வங்கிக்கு சென்ற போது, ரூ 5,000 கேட்டு பின்னர் ரூ.3,500 கொடுத்தால் தான் சான்றிதழ் தரமுடியும் என செயலாளர் கூறவே.
இலஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் அறிவுரையின் பேரில் நேற்று பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய 3,500 பணத்தை எடுத்துச் சென்று முருகனை சந்தித்து கொடுத்துள்ளார்.
அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பிடித்தனர். ஆனால், அவரிடம் பணம் இல்லை. விசாரணையில், இலஞ்ச ஒழிப்பு துறையினர் சுற்றி வளைத்ததை அறிந்து கொண்டதும் கழிவறைக்குச் சென்ற முருகன் அந்த பணத்தை டாய்லெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றிவிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,
பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடிய பின்னர் பணத்தை மீட்டனர். இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து முருகனைக் கைது செய்தனர்.
கருத்துகள்