நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் 135-வது குதிரைப் பந்தயம் தொடங்கியது.
தமிழ் புத்தாண்டுக் கோப்பையை "டார்க் சன்" குதிரை தட்டிச் சென்றது. நீலகிரி மாவட்டத்தின் கோடை காலத்தில் சீசனின் முக்கிய நிகழ்வான குதிரைப் பந்தயங்கள் தொடங்கியது. ஆண்டு தோறும் கோடை காலத்தில் சீசனினின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகமண்டலம் குதிரை பந்தயங்கள் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி ஜுன் மாதம் வரை நடக்கும்.
அந்த வகையில் 135-வது குதிரைப் பந்தயம் தொடங்கியது. இதற்காக பெங்களூர், சென்னை, பூனா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து 600 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டன. முக்கிய பந்தயங்களான ‘நீலகிரி டர்பி’ மே 15-ஆம் தேதியும், டாக்டர் எம்.ஏ.எம் ராமசாமி நினைவுக் கோப்பை மே மாதம் 14-ஆம் தேதியும், ‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி ஜூன் மாதம் 2-ஆம் தேதியும், ‘ஊட்டி ஜூவைனல் ஸ்பிரின்ட் கோப்பை’ ஜூன் மாதம் 3-ஆம் தேதியும் நடக்கின்றன.முதல் நாளான இன்று ஏழு போட்டிகள் நடத்தப்பட்டன. முக்கிய போட்டியாக புத்தாண்டுக் கோப்பைக்கான போட்டியில் எட்டு குதிரைகள் பங்கேற்றன. அந்தப் போட்டியில் ‘டார்க் சன்’ என்ற குதிரை வெற்றி பெற்றது. குதிரையை ஜாக்கி நஹத் சிங் சவாரி செய்தார். வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர் ஜெ.செபாஸ்டியன், மற்றும் உரிமையாளருக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த குதிரை பந்தயங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் மக்களும் கண்டனர்.
கருத்துகள்