தேசிய கடல்சார் தினத்தில் இந்தியாவின் புகழ்மிக்க கடல்சார் வரலாற்றை பிரதமர் நினைவு கூர்ந்தார்
தேசிய கடல்சார் தினத்தில் இந்தியாவின் புகழ்மிக்க கடல்சார் வரலாற்றை பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கியத்துவம் வகிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதும், தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்குமான துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க தேவையான கவனத்தை மத்திய அரசு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;
“இன்று தேசிய கடல்சார் தினத்தில் நமது பெருமைமிக்க கடல்சார் வரலாற்றை நாம் நினைவுகூர்வதுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் அதன் முக்கியத்துவம் சிறப்பிடம் பெற்றுள்ளதை எடுத்துக் கூறுகிறோம். கடந்த 8 ஆண்டுகளில் நமது கடல்சார் துறை பெரிய உச்சங்களைத் தொட்டுள்ளதுடன் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்க பெரும் பங்களித்துள்ளது.”
“கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு துறைமுகங்களின் திறனை விரிவுபடுத்துதல், தற்போதுள்ள நடைமுறைகளை மேலும் செயல்திறன்மிக்கதாக்குதல் உள்ளிட்ட துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளது. இந்திய உற்பத்திப் பொருட்கள் புதிய சந்தைகளை அணுகுவதை உறுதி செய்யும் வகையில் நீர்வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.”
“பொருளாதார முன்னேற்றத்திற்கும், தற்சார்பு இந்தியாவை உருவாக்கவும் கடல்சார் துறையை நாம் பயன்படுத்தி வரும் நிலையில், கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்யவும் நாம் போதுமான கவனத்தை செலுத்தி வருகிறோம். இந்தியாவின் பெருமைக்குரிய இவை பாதுகாக்கப்படுகின்றன.”
கருத்துகள்