இராமேஸ்வரம் பேக்கரும்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று புகைப்படக் கண்காட்சி
இந்திய விடுதலைப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவகம் அருகே இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாறு மற்றும் போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புதுதில்லி பத்திரிகை தகவல் அலுவலகத் தலைமை இயக்குநர் டாக்டர் வசுதா குப்தா குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் சுதந்திர அமிர்தப் பெருவிழா கையேட்டினை வெளியிட்டார். கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உறவு மாறவில்லை என்றும், கற்பித்தல் முறையும் கற்றல் முறையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டும் என்றும் கூறினார். பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பதே சிறந்தது என்று பலரும் எண்ணி வருவதாகவும் அவை தவறு என்றும், வரலாறு, பூகோளம் என்பது நமது வாழ்வியல் முறை என்றும் நாம் கற்பதை மேலோட்டமாக அல்லாமல் மிகவும் ஆழமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியத் தகவல் ஒலிபரப்புத் துறையின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர்
எம் அண்ணாதுரை அவர்கள் பேசும்போது, மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மக்களாட்சி, இந்த மக்களாட்சிக்கு அடித்தளம் சுதந்திரம், சுதந்திரத்திற்கு அடித்தளமாக இருந்தது சுதந்திரப்போராட்டம் என்றும் நாம் சுதந்திரமாக இருப்பதற்கு காரணம் இந்த சுதந்திர போராட்டவீரர்களின் தியாகம் என்றும் அவர் குறிப்பிட்டார். இவற்றை அனைவரும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இவற்றை பார்த்து அடுத்த தலைமுறையினருக்கு சுதந்திரத்தின் மகத்துவத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் தகவல் ஒலிபரப்புத் துறையின் பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநர் வெங்கடேஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் வரவேற்புரையாற்றினார். பின்னர் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் கண்காட்சியினை கண்டுகளித்தனர்.
கருத்துகள்