குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டம் குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுவதாகவும், அவற்றை அம்மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்வதாகவும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின்கீழ், 2018-19 ஆம் ஆண்டில் ரூ.915.69 கோடி, 2019-20-ல் ரூ.865.83 கோடி, 2020-21-ல் ரூ.856.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், வாத்சல்ய இயக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. நெருக்கடியான சூழலில் குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவது, பல்வேறு பின்புலன்களுடன் வளரும் குழந்தைகளுக்கு முழுமையான மேம்பாட்டுக்கு தீர்வுகளை ஏற்படுத்துவது, புதுமையான தீர்வுகளை வழங்குவது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அமைச்சகம் அவ்வப்போது தொடர்பு கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளை தடங்கலின்றி தொடர்ந்து வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.
கருத்துகள்