சிவில் விவகார வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றிய டி எஸ் பி க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம்
சிவில் விவகார சொத்துப் பிரச்னையில் தேவையின்றி பெண் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யக் காரணமாக இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு,
மாநில மனித உரிமைகள் ஆணையம், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், கொரநாடு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி. மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், 2018 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் "சொத்து பிரச்னை தொடர்பாக 2018 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது.எதிர்தரப்பினருடன் சேர்ந்து, நாகப்பட்டினத்தில நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணிபுரியும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், சுவாமிநாதன் எனக்கு எதிராக செயல்பட்டார். அவரது அறிவுறுத்தலின்படி, என் மீது காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கைதும் செய்தனர்.உச்ச நீதிமன்ற விதிகளுக்கு மாறாக நடந்து, எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் சிவில் பிரச்னையில் தேவையின்றி தலையிட்டு, மனுதாரர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுவாமிநாநாதன் காரணமாக இருந்தது விசாரணையில் தெரிய வருகிறது.
இந்த விவகாரத்தில், மனுதாரருக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மன உளைச்சலை ஏற்படுத்தி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஆணையம் கருதுகிறது. எனவே, மனுதாரர் கல்யாணிக்கு, நான்கு வாரங்களுக்குள், தமிழக அரசு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆணையம் பரிந்துரைக்கிறது.
இந்த இழப்பீட்டுத் தொகையை காவல்துறை துணை கண்காணிப்பாளர், சுவாமிநாதனிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் வழக்குத் தொடரவும் ஆணையம் பரிந்துரைக்கிறதென அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்