கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், குப்பம், காளிபாளையம் வெட்டுகாட்டு தோட்டம்
ஜெகநாதன் (வயது 52). விவசாயி. சமூக ஆர்வலர். இவர் இரண்டு நாட்கள் முன்பு இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து காருடையாம்பாளையம் சென்றபோது தனியார் கல்குவாரி மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அவர் மனைவி ரேவதி மற்றும் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். ரேவதி அளித்த புகாரில், கரூர் ஆண்டாங்கோவில் அருகே சிந்து நகரை சேர்ந்த செல்வகுமாருக்கு (வயது 39) சொந்தமான கல் குவாரி உரிமம் முடிந்த பிறகு சட்ட விரோதமாக செயல்படுவது தொடர்பாக எனது கணவர் ஜெகநாதன் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் கனிம வளத்துறைக்கும் புகார் அளித்திருந்தார். அதை விசாரித்த அதிகாரிகள் கல் குவாரியை மூட உத்தரவிட்டனர். இதனால், திட்டம் போட்டு லாரியை ஏற்றி எனது கணவரைக் கொலை செய்து விட்டனர் என கூறியிருந்தார்.
தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் விபத்து ஏற்படுத்திய மினி லாரி அன்னை புளூ மெட்டல் கல் குவாரிக்குச் சொந்தமான தென்பது தெரிய வந்ததையடுத்து மினி லாரி டிரைவரான சேலம் ஓமலூர் சக்திவேல்(வயது 24), குவாரி உரிமையாளர் செல்வகுமார், ராணிப்பேட்டை ரஞ்சித் (வயது 44) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் கல்குவாரியை எதிர்த்து குரல் கொடுத்ததால், மினி லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்டிருக்கும் செயல் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்