கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்த நிலையில். அதைக் கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்க்கடியால் மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் கூட கேரள மாநிலம் ரன்னியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். ஆகவே, தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க கேரளாவில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது., நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறுவது “நான் கூட நாய்களை அதிகம் விரும்புவேன். தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பட்டினியால் வாடாமல் இருக்க அதற்கு ஏராளமானோர் உணவளித்து வருகின்றனர். உணவு வழங்குவோர்தான் நாய்களுக்கு தடுப்பூசி போடும் செலவையும் ஏற்க வேண்டும். தெரு நாய்கள் குறித்த தொல்லைகளுக்கு தீர்வு காண்பது அவசியம். தெரு நாய்களுக்கு உணவு வைப்பவர்கள் தான் பொதுமக்களை அந்த நாய்கள் கடிக்காமல் இருப்பதைத் தடுக்க வேண்டும். அதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
கடிபட்டவர்கள் சிகிச்சை பெறும் செலவையும், பராமரிப்புச் செலவையும் ஏற்கவேண்டும். ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய்களைக் கண்டறிந்து கால்நடை பராமரிப்புத்துறையால் தனியாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் செப்டம்பர் 28-ஆம் தேதியில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்” என்றார். கேரளாவில் தெருநாய்கள் குறித்த பிரச்சினை, நாய் தாக்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய 2016-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஸ்ரீ ஜெகன் தலைமையிலான ஆணையத்தை அமைத்தது. பின்னர், அந்தக் குழுவும் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சம் பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இதுவரை 21 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் வரும் தீர்வு தான் அணைத்து மாநிலத்தில் அமலாகும்
கருத்துகள்