துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தை சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்துவைத்தார்
துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தை சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று (2023, ஏப்ரல் 24) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்த மையத்தை திறந்து வைப்பது மிகச்சிறப்பான தருணம் என்று குறிப்பிட்டார். இதனை முன்மாதிரியாகக் கொண்டு விரைவில் மேலும் பல சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். பருவநிலை மாற்றம், கடல்சார் ரோபோக்கள், கடல்சார் தகவல் மற்றும் பகுப்பாய்வு, நவீன வடிவமைப்பு மற்றும் உருவாக்கப் பிரிவுகளில் பல்வகை செயல்பாட்டுடன் உலகத்தரத்திலான கடல்சார் ஆய்வகங்கள் விரிவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ரூ.1.4 லட்சம் கோடி செலவில் 108 திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுவரை ரூ.34,750 கோடி செலவிலான 43 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன என்றார். ரூ.67,759 கோடி செலவில் 34 திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேசிய அளவில் 2035-க்குள் ரூ.5.4 லட்சம் கோடி முதலீட்டில் 202 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றும் இவற்றில் ரூ.1,21,545 கோடி செலவில் 228 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். கடலோர மாவட்டங்களில் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக ரூ.58,000 கோடி செலவில் 567 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொலைநோக்குப் பார்வைகொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை கட்டமைப்பின் நவீன மயம் மற்றும் டிஜிட்டல் மயம் காரணமாக வளர்ச்சி விகிதம் வரலாற்றுச்சிறப்புமிக்கதாக மாறியுள்ளது. உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்பாட்டு குறியீட்டில் கடந்த ஆண்டு 139 நாடுகளில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தை பெற்றுள்ளது என்று திரு சர்பானந்த சோனாவால் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர்
வி காமகோடி, துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் முரளி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மாலினி ஷங்கர், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் திரு சுனில் பாலிவால், நியூமங்களூர் துறைமுக ஆணையத் தலைவர் டாக்டர் வெங்கட ரமணா மற்றும் பேராசிரியர்கள், ஐஐடி ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உற்பத்தி என்பதை செயல்படுத்துவதற்காக துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் ரூ. 77 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாக செயல்படும் இந்த நிறுவனம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கான தீர்வுகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குகிறது. இந்தியாவில் உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா முன்முயற்சிகளை மேற்குறிப்பிட்ட துறைகளில் இந்நிறுவனம் மேம்படுத்துகிறது.
கருத்துகள்