இந்து சமய ஆலயங்கள் மதசார்பற்றவை என்பது சாத்தியமா
உச்சநீதிமன்றம் வினா ஆலயங்கள் ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவத் திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் "தற்போதைய நிலைமையே இறுதித் தீர்ப்பு வரும்வரை தொடர வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி உச்சநீதிமண்றம் பிறப்பித்த உத்தரவை விலக்குவதற்கு இன்று மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜி.பாலாஜி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்த விபரம் : 27.ஜூன்.2023-ஆம் தேதி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களில்லாத அர்ச்சர்களுக்கு மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓர் ஆண்டு காலம் பயிற்சியளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசின் சம்பந்தப்பட்ட துறை பிறப்பித்தது. மேலும் 28.ஆகஸ்ட்.2023- ஆம் தேதியில் எதிர்மனுதாரர்கள் வெளியிட்ட தமிழ்நாடு அரசுக் கடிதத்தில் ஆகம விதிகளின்படி நிர்வகிக்கப்படும் கோவில்களில் பூஜைகள், சடங்குகள் செய்வதில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகம விதிப்படி நடக்கும் கோவிலில் அர்ச்சகர்கள் பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத் துறை மூலம் 9.செப்டம்பர்.2023-ஆம் தேதியில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்குகளில் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி செயல்படவும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அரசாணைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இவ் வழக்கை செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் , ரிட் மனு மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்ததுடன், கேள்விக்குரிய ஆகம விதிப்படி உள்ள கோயில் "அர்ச்சகா் ஷிப்' தொடர்புடைய விவகாரத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலைமையே தொடர வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தநிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே முன்வைத்த, "அர்ச்சகர்களை நியமிக்க அரசுக்கு உரிமையுள்ளது என்ற வாதத்தை ஏற்க முகாந்திரமில்லை' என நீதிபதிகள் அமர்வு கூறியது.
மேலும் அவர் வாதிடுகையில், "அர்ச்சகர்களின் நியமனம் ஒரு மதச்சார்பற்ற செயல்பாடாகும். அவர்களை நியமிக்க அரசுக்கு உரிமையுண்டு' என்றார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, "ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த பிரிவைச் சேர்ந்த கோவில்களில் அர்ச்சகர்களை நியமிப்பதில் ஆகம விதி மரபுகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மாநில அரசு பின்பற்றவில்லை என்பது தான் இங்கு வாதம்' என்றும் தெரிவித்தது. மேலும், மேல்முறையீட்டு மனுக்களை அனுமதிப்பதாகக் கூறிய உச்சநீதிமன்றம், இது தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதிக்குப் பட்டியலிட உத்தரவிட்டது. இதே விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விசாரணைக்கும் தடைவிதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தது.
மேலும், அறங்காவலர் குழு தேர்தல் தொடர்பாக தாக்கலான மேல்முறையீடு தொடர்பான மற்றொரு மனு விவகாரத்தில், நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "நிர்வாக அறங்காவலர்கள் குழு தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் இன்றிலிருந்து 3 மாத காலத்தில் முடிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் வழக்கின் தரப்பினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
கருத்துகள்