தில்லை நடராஜர் கோவில் பக்தர்களுக்குச் சொந்தமானது;
தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்துக்குள் நந்தவனம் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை பொது தீட்சிதர்கள் அரசின் எந்த வொரு அனுமதியும் பெறாமல் மேற்கொண்டு வருவதாகக்கூறி இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும், மற்றும் எம்.என்.ராதா என்பவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நடைபெற்ற போது மனுதாரர் எம்.என்.ராதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ள மாட்டோமென உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டு கட்டுமானப்பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று கூட ஜேசிபி இயந்திரம் கோயிலுக்குள் நிற்கிறது. அதற்கான புகைப்படங்கள் உள்ளதெனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், திருவண்ணாமலை கோயிலுக்கு வெளியே கட்டுமானங்கள் கட்டப்படுவதாக பலரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால் சிதம்பரத்தில் எந்த அனுமதியும் பெறாமல் கோயிலுக்குள்ளேயே கட்டுமானம் கட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானது. பாரம்பரியமிக்க புராதனச் சின்னமான சிதம்பரம் கோவில் மீது கை வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். சிதம்பரம் நடராஜர் கோவில் பக்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதன் மீது யாரும் உரிமை கோர முடியாது என்றனர். அப்போது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிசங்கர், சிதம்பரம் கோவில் வளாகத்துக்குள் எந்தவொரு விதிமீறலும் நடைபெறவில்லை. 150 ஆண்டுகள் கடந்த உயர் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதுபோலத்தான் இதுவும் என்றார்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருன் நடராஜன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கிலும் சிதம்பரம் கோவிலில் முறையற்ற நிர்வாகம் நடைபெற்றால் அதில் அரசு தலையிடலாம் என்று தான் உள்ளது. கோவில் மீதான உரிமைகள் அனைத்தையும் தனிநபர்களுக்குக் கொடுத்து விடவில்லை. சட்டவிரோதக் கட்டுமானங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்தக் கோவிலை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அந்தக்குழு எப்போது வேண்டுமென்றாலும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் சென்று ஆய்வு நடத்துமென்றார்.
அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், வழக்குத் தொடர்ந்த நடராஜ தீட்சிதர் பக்தர்களைத் தாக்கியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர். அந்த வழக்கே உள்நோக்கமானது. தவறான தகவலை நீதிமன்றத்துக்குத் தெரிவித்து அந்த உத்தரவைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், அதுதொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் தான் முறையிட வேண்டும். எங்களைப் பொருத்தமட்டில் சிதம்பரம் கோவிலுக்குள் கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோமென உத்தரவாதம் அளித்துவிட்டு அதை மீற முடியாது. அதுதொடர்பான ஆதாரங்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு செய்யக் குழுவும் அமைக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், சிதம்பரம் கோவிலில் தற்போது உண்டியல் இல்லை. பக்தர்கள் அளிக்கும் நன்கொடை யாருக்குச் செல்கிறது. நன்கொடையை வசூலிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது, எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு இடையீட்டு மனுதாரரும், ஆலய வழிபாட்டுக்குழுத் தலைவருமான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ், 1951-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இந்த கோவிலில் உண்டியல் கிடையாது. பக்தர்கள் அளிக்கும் நன்கொடை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தனிப்பட்ட முறையில் தரப்படும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் சி.கனகராஜ், இந்த கோவிலுக்குள் அனுமதியின்றி யாகங்கள் நடத்தப்படுகிறது. அதற்கு பக்தர்களிடம் ரூபாய். 5 லட்சம் முதல் ரூபாய். 10 லட்சம் வரை பணம் வசூலிக்கப்படுகிறதென்றார். அதற்கு நீதிபதிகள், பொத்தாம் பொதுவாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது. அப்படி பணம் வசூலித்தால் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் எனக் கூறி வழக்கை டிசம்பர் மாதம் .20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கருத்துகள்