தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்கள் டிஆர்பி தேர்வின் மூலம் விரைவாக நிரப்பப்படுமென
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள நான்காயிரம் உதவிப் பேராசிரியர்களுக்கான பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் நிரப்பப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோவி.செழியன், துறையின் செயல்பாடுகள் குறித்து உயர்நிலை அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை மெரினா கடற்கரைச் சாலையிலுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலாளர் ர் கே.கோபால் இ ஆ ப, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரஹாம் இ ஆ ப, கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி இ ஆ ப, உயர்கல்வி மன்றத துணை தலைவர் எம்.பி.விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாதென்ற நோக்கில், தற்காலிக ஏற்பாடாக கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, நிரந்தரமாக உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் விரைவில் தேர்வு நடத்தப்பட்டு, அதில் நான்காயிரம் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட தலைமைப் பதவிகள் படிப்படியாக நிரப்பப்படும். துணைவேந்தர் நியமனத்தைப் பொருத்தவரை, அரசு மற்றும் பல்கலைக்கழகத்தில் வேந்தராகிய ஆளுநரின் நிலைப்பாடு வெவ்வேறாக உள்ளன துணைவேந்தர் தேர்வுக் குழுவில் UGC பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டுமென ஆளுநர் வலியுறுத்துகிறார். அது குறித்து முதல்வர் மற்றும் அனுபவமிக்க உயர் அலுவலர்களுடன் கலந்துபேசி, துணைவேந்தர் நியமனத்திலுள்ள முரண்பாடுகள் களையப்படும். பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்