நாடாளுமன்ற நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் பொது மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோமென குடியரசுத் துணைத் தலைவர் கருத்து
"நாடாளுமன்ற நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் பொது மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோம்,'' என மாநிலங்களவையில் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதாப் சந்திர சாரங்கி, மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகலாந்து மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாங்னோன் கோன்யக், மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரிடம் புகார் கடிதம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற தள்ளுமுள்ளு சம்பவத்தில் காயமடைந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்த புகாரில் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் அவர் பேசியதாவது:
பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடியது ஜனநாயக மாண்புகளை உறுதிப்படுத்தி இருந்தாலும், இந்த அவையில் நமது நடவடிக்கை வேறு விஷயங்களைச் சொல்கிறது. இந்த அவை 43 மணி நேரம் 27 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்த அப்பட்டமான உண்மை கவலை அளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் இந்திய மக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். இதன் தொடர்ச்சியான இடையூறுகள், நமது ஜனநாயக அமைப்புகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன.
சில சட்டங்களை நிறைவேற்றியும், இந்தியா சீனா உறவுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தைக் கேட்டது என பல சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும் அது அனைத்தையும் நமது தோல்வி மறைத்து விட்டது. நாம் அனைவரும் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். நாட்டின் 140 கோடி மக்கள் நம்மிடம் இருந்து சிறந்ததை எதிர்பார்க்கின்றனர். அர்த்தமுள்ள விவாதம், இடையூறுக்கு இடையேயான நேரத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். நமது ஜனநாயக மரபானது, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி எழுச்சி பெறுவதையும், நாடாளுமன்றத்தின் புனிதம் உறுதி செய்யப்படுவதையும் எதிர்பார்க்கிறது இந்த அவை தனித்துவமானது. நமது ஜனநாயகத்தை இந்த உலகம் எதிர்பார்த்து கொண்டுள்ளது. நமது நடத்தை மூலம் நமது மக்களை தோல்வி அடையச் செய்துவிட்டோம். நாடாளுமன்றத்திற்கு இடையூறு என்பது மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கேலி செய்கின்றன. அனுபவமிக்க விவாதம் மேலோங்க வேண்டிய நிலையில் இடையூறு மட்டுமே காண்கிறோம். மக்களின் நன்மைக்காக சேவை செய்ய கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தோம். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.
கருத்துகள்