பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஆதார். ஆவணமாகப் பயன்படுத்துவது குறித்த வதந்திகளுக்கு இந்திய அரசின் விளக்கம்
பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஆதார். ஆவணமாகப் பயன்படுத்துவது குறித்து இந்திய அரசின் விளக்கம்
அதாவது அரசு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பள்ளி ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்புச் சான்றிதழ் பயன்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல்களை வதந்தி பரப்பி வருகிறார்கள்.
அவர்கள் பரப்பி உள்ள தகவலின் படி, அரசு சேவைகள், கல்வி, பயணம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெறுதற்காக பிறப்புச் சான்றிதழ் கட்டாய ஆவணமாக்கப்பட்டிருக்கிறது. எனவே மூத்த குடிமக்கள் உள்பட பொதுமக்கள் பிறப்புச் சான்றிதழுக்கு பதிவு செய்ய, பெயரில் மாற்றங்களை செய்ய 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்ததாகவும் கூறியிருந்த வதந்திகள் பரவியது.
மேலும், பள்ளி ஆவணங்கள் இனி வயதைக் குறிப்பிடும் சான்றாகப் பயன்படாது. அரசு வழங்கும் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே அதிகாரப்பூர்மாகப் பயன்படும் என்றும் அரசு அறிவித்துள்ள கடைசி நாளுக்கு பின்னர் பிறப்பு சான்றிதழில் எந்தவித மாற்றமும் செய்யமுடியாது என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
இந்த விவகாரம் குறித்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27- ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது. பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக இதுபோன்ற எந்தவிதமான அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்