கோவிலுக்குச் சொந்தமில்லாத பொது இடத்தில் மதச் சடங்குகள் செய்து வரும் புரோகிதர்களைத் தடுக்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் மற்றும் அதிகாரத்தை கோவிலுக்கு உள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள் - உயர்நீதிமன்றம் கறார்.
கோவிலுக்குச் சொந்தமில்லாத பொது இடத்தில் மதச் சடங்குகள் செய்து வரும் புரோகிதர்களைத் தடுக்கக்கூடாது என உத்தரவு
ஹிந்துக்களில் புரோகிதர்கள் சடங்குகள் மற்றும் பரிகாரம் கோவிலுக்கு அருகில் வெளியே பொது இடத்தில் செய்ய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமா ?
கோவில் வளாகத்துக்கு வெளியே, சடங்குகள் மற்றும் மந்திரங்களை வேதங்கள் நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதைத் தடுக்கக்கூடாது' என, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த, புரோகிதர் பி.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில்
பவானி கூடுதுறையிலுள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே, கிரிகை மற்றும் பூஜைகள் மற்றும் பரிகாரங்களை, கடந்த எட்டு ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். சடங்குகள் செய்வதற்குரிய தகுதியை கொண்டுள்ளேன்.
தென்னிந்தியாவின் திருவேணி சங்கமம் என நம்பப்படும் பவானி கூடுதுறை ஹிந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலம், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில், பித்ரு பரிகாரம், கிரியை திதி தர்ப்பணம் மற்றும் நவக்கிரக தோஷம் செய்ய இந்த இடம் உகந்தது.
சங்கமேஸ்வரர் கோவிலுடன், எனக்கு எந்தவிதமான தொடர்புமில்லை. அவ்வாறு இருக்கும் போது, கோவிலின் நிர்வாக அலுவலர், என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு, பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் இங்கு செய்யக்கூடாது என்று தடுக்கிறார். இவ்வாறு தடுக்க, இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தில் எந்த விதிகளும் இல்லை.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல்.மாதம் 24 ஆம் தேதி முதல், கோவில் நிர்வாக அலுவலர், புரோகிதம் செய்வதைத் தடுத்து வருகிறார். இது தொடர்பாக, 2024 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியில் அளித்த மனுவை பரிசீலிப்பதோடு, புரோகிதம் செய்வதை தடுக்க, கோவில் நிர்வாக அலுவலருக்குத் தடை விதிக்க வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் ஆஜராகி: கோவில் வளாகத்திற்குள் நடக்கும் பூஜைகளை ஒழுங்குப்படுத்துவது, கோவில் நிர்வாக அலுவலரின் கடமை. தகுதி பெறாத, அங்கீகரிக்கப்படாத நபர்கள், பக்தர்களை ஏமாற்ற அரசு அனுமதிக்க முடியாது.
முறையான சடங்குகள் நடத்தப்படுவதையும், மந்திரங்கள் மற்றும் பிற சடங்குகள் குறித்து, போதுமான அறிவு பெற்றிருக்கின்றனரா என்பதை உறுதிசெய்த பிறகு தான், புரோகிதர்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன. அவர்களை சடங்குகள் செய்ய அனுமதிக்கிறோம். கோவில் வளாகத்துக்குள், கோவில் சார்ந்த நிலங்களில், அனுமதி பெற்றவர்கள் தவிர, வேறு எவரும் சடங்குகள் செய்ய அனுமதி கிடையாது. என அவர் வாதாடினார்.
பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவிலில் வழிபாடு, சடங்கு செய்ய விரும்பும் பக்தர்களை, அங்கீகரிக்கப்படாத நபர்கள் ஏமாற்ற அனுமதிக்க முடியாது என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் நடக்கும் பூஜை, சடங்கை ஒழுங்குப்படுத்த கோவில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.
ஆனால், உரிய தகுதி பெற்றிருக்கும் புரோகிதர்களை வைத்து, பக்தர்கள், கோவில் வளாகத்திற்கு வெளியே, பூஜைகள் மற்றும் பரிகாரங்களைச் செய்யும் போது, அதில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தலையிடத் தேவையில்லை.
மனுதாரரைப் போன்ற புரோகிதம் செய்துவரும் நபர்கள், கோவிலின் ஒப்புதல் பெற்ற பின்னரே, பூஜைகள் மற்றும் பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கூறுவது, கோவில் நிர்வாக அலுவலர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.
மனுதாரர் போன்றோர், கோவிலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறிக்கொள்ளாத வரை, கோவிலுக்குச் சொந்தமில்லாத, வேறு எந்த நிலத்திலும், தாங்களாகவே காரியங்களைச் செய்யும் போது, அதில் கோவில் அலுவலர்கள் தலையிடத் தேவையில்லை.
அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே, கோவிலுக்குள் பூஜை, சடங்குகளை நடத்துகின்றனர் என்ற அறிவிப்புப் பலகையை, அறநிலையத்துறை ஆலயத்தில் வைக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்