மாநில அமைச்சர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது மனைவி, மே மாதம் 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அபகரித்த வழக்கில் உத்தரவு
மே மாதம் 23 ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை. சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக பதவி வகித்த காலத்தில் தனது அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அவரது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பார்த்திபன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்பேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிபிசிஐடி காவல் துறை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக நடந்து வருகிறது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் 2025 மார்ச் மாதம் தள்ளுபடி செய்ததையடுத்து, இந்த வழக்கு கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைக் கூட்டம் நடந்ததால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு கோரி அவரது வழக்கறிஞர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று நீதிபதி ஜெயவேல், இந்த வழக்கின் குற்றச்சாட்டுப்பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் வரும் மே மாதம் 6-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கி உத்தரவிட்டிருந்தார் அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று மே மாதம் 6 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை வரும் மே மாதம் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் கட்டாயம் குற்றச்சாட்டுப்பதிவுக்காக நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை அவர்கள் ஆஜராகாவிட்டாலும் அன்றையதினம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என அறிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் தான் இந்த வழக்கை அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தினார்.
கருத்துகள்