நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்
அவர் உயிரிழந்ததால் சேந்தமங்கலம் தொகுதி காலியானது சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் திமுக உறுப்பினரான பொன்னுசாமி. இவர் நேற்றிரவு வீட்டில் இருந்த நிலையில், அதிகாலை திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து கொல்லிமலை செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சேந்தமங்கலம் தாலுகா நடுக்கோம்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மறைவிற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பொன்னுசாமியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பொன்னுசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடி மக்கள் போட்டியிடும் தொகுதி தனி ஒதுக்கீடு பெற்றதாகும்.அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோகிராம் சிகிச்சையும் அளிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், அவர் மலைவாழ் பழங்குடி மக்களின் பிரதிநிதியாகத் தொடர்ந்து செயல்பட்டார். மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தாலும், மலைவாழ் மக்களின் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
கொல்லிமலை சோழக்காடு பகுதியில் பழக்கடை நடத்தி வந்தவர், எளிதில் அணுகக்கூடியவராகவும், எளிமையானவராகவும் அறியப்பட்டார்.



கருத்துகள்