பாமக தலைவர் மருத்து
வர் அன்புமணியின் பிரச்சாரக் கூட்டத்தில் அத்துமீறிப் புகுந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் கைதால் கதறல்.!
சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்த போது நாம் தமிழர் கட்சியின் சார்பில் அங்கு போட்டியிடும் வேட்பாளரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளான வித்யா தேவையில்லாமல் கூட்டத்தில் உள்ளே புக முயன்றதை அடுத்து காவல்துறை அவரை அழைத்துச் சென்ற நிலையில் கண்ணீர் விட்டார்
மேச்சேரி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுகவின் வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால், அப்பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
அதே நேரத்தில், மேட்டூர் நோக்கிச் செல்வதற்காக வித்யா அவரது ஆதரவாளர்களுடன் அந்த வழியாக வந்துள்ளார் அப்போது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டப்பகுதிக்குள் அவர் நுழைய முயன்றார்.
கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அங்கு பணியிலிருந்த காவல்துறையினர், வித்யாவைத் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்த வித்யா, தொடர்ந்து உள்ளே செல்ல முயன்றதால், காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதையடுத்து அவர் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அவரது ஆதரவாளர்களும் அங்கு திரண்டதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலைக்குப் பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வராததால், வித்யா கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து வித்யா கூறுகையில், சிந்தாமணி முதல் கோவிந்தபாடி வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்துவதற்காக முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்ததாகவும், ஆனால் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் நடைபெற்றதால் தங்களை அந்த வழியாகச் செல்ல அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். நீண்ட நேரமாக காத்திருந்தும் அனுமதி வழங்கப்படாததால், நேரடியாக அது குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸிடம் சென்று தெரிவிக்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்னை மட்டும் பல இடங்களில் சோதனை செய்வதாகவும், மற்ற வேட்பாளர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நடைபெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேசமயம் காவல்துறையினர் தரப்பில், தேவையான அனுமதி முறையாக பெறப்படாத காரணத்தாலேயே அவரைத் தடுத்து நிறுத்தியதாக காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த சம்பவத்தால் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.

கருத்துகள்