நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மண்டல கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சச்சின் புனேதா தொடங்கி வைத்தார்
மத்திய அரசின் 'விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தை' குறிக்கும் வகையில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தால் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டுவரும் கண்காட்சி வரிசையில் இது பத்தாவது ஆகும்
வரவிருக்கும் 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், 'விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்' கொண்டாட்டங்களை, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தில் உள்ள தண்டி வரை மகாத்மா காந்தி மேற்கொண்ட உப்பு சத்தியாகிரக யாத்திரையை நினைவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரைக்கு மார்ச் 12 அன்று கொடியசைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வை சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், மத்திய அரசோடு இணைந்து 2021 மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி 75 வாரங்களுக்கு கண்காட்சிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன.
இத்தகைய கண்காட்சி ஒன்றை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மண்டல கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சச்சின் புனேதா தொடங்கி வைத்தார். பத்திரிகை தகவல் அலுவலகம்/மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜெ காமராஜ், நிலைய இயக்குநர் திரு உமாசங்கர் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் ரயில்வே ஆகியவற்றின் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வாழ்வையும், நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இந்த புகைப்பட கண்காட்சி விளக்குகிறது.
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வரும் தினசரி பயணிகளின் சராசரி எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த ஐந்து நாள் கண்காட்சி நடைபெறுகிறது.
கடுமையான கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் கைப்பிரதிகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை, இத்தகைய கண்காட்சிகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தியுள்ளது.
சென்னையில் உள்ள காந்தி மண்டபம், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூரில் மார்ச் 12 அன்று கண்காட்சிகளை மாநில அரசோடு இணைந்து மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி, மதுரை, ராமநாதபுரம், தர்மபுரி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள அதன் கள அலுவலகங்களில் மார்ச் மாதத்தில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் கண்காட்சிகளை நடத்தியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் கண்காட்சி இந்த வரிசையில் பத்தாவது ஆகும்.
கோயம்புத்தூரில் உள்ள கள மக்கள் தொடர்பு அலுவலகம் இதே போன்றதொரு கண்காட்சியை அந்நகரத்தில் இன்று தொடங்கியுள்ளது.
கருத்துகள்