' குமுதம் ' எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு
குமுதம் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை செட்டியார் அவர்களின் மனைவியும் குமுதம் இயக்குநர்களில் ஒருவருமாக இருந்த திருமதி.கோதை அண்ணாமலை இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தார்
1947ஆம் வருடம் அவரது கணவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளராக இருந்து நிறுவிய குமுதம் இதழின் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலங்களிலிருந்து இறுதிவரை உறுதுணையாக இருந்தவர். எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
1994ல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் டாக்டர் எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றார். அவருக்கும் குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவர் கோதை ஆச்சி என்பது குறிப்பிடத்தக்கது. கோதை ஆச்சிக்கு ஒரு மகன். இரண்டு மகள்கள்.
கோதை ஆச்சியின் மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபலமான இதய நோய் சிகிச்சை மருத்துவராக இருக்கிறார். தந்தையின் கனவுகள் மெய்ப்பட குமுதம் பணிகளையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்,
மகள் விஜயலட்சுமி அழகப்பன் மைசூரில் வசிக்கிறார்.
மற்றொரு மகள் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கிருஷ்ணா சிதம்பரம் சென்னையில் வசிக்கிறார்.குமுதம் இதழ் மற்றும் வழக்கு என்ன என்று 1990 க்கு பின்னர் பிறந்த நபர்கள் அறிய வாய்ப்பு இல்லை. மீடியாவுக்கு வெளியேயுள்ள பலருக்குத் தெரியாது ஆகவே அவர்களுக்காக சுருக்கம். தொலைக்காட்சி வராமல் இருந்த காலத்தில் பிரபலமான இதழ் அது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கானாடுகாத்தான் நகரத்தார் எஸ்.ஏ.பி.அண்ணாமலை செட்டியார் தொடங்கியது குமுதம். இதழ் அதன் நிர்வாகியாக வேலைக்கு வந்த அவரது நண்பர் பி.வி.பார்த்தசாரதி அய்யங்கார் அவரை பார்ட்னர் ஆக்கினார். 2/3 செட்டியாருக்கு, 1/3 அய்யங்காருக்கு. நல்ல நண்பர்கள். அப்போது சண்டை வரவில்லை. புத்தக விற்பனை வாரம் பல இலட்சம்
அண்ணாமலை செட்டியார் மகன் ஜவகர் பழனியப்பன் டாக்டராகி அமெரிக்காவில் செட்டிலானவர். இதய சிகிச்சையில் நிபுணர் என்று தொழில் போனது.
பார்த்தசாரதி அய்யங்காரின் மகன் வரதராஜன் இங்கே நிர்வாகத்தை கவனித்தார். நாள்போக்கில் எடிட்டோரியல் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டார். வேறு பல வேலைகளும் செய்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார்.
அந்த வேலைகள் டாக்டர் ஜவகர் பழனியப்பன் பார்வைக்கு சென்றதும் அவர் கணக்கு கேட்டார். விவகாரம் வெடித்தது. சமூக, அரசியல் பெரியவர்கள் சமாதானம் பேசினார்கள். அப்போது
உடன்பாடு ஏற்பட்டது. ரிப்போர்ட்டர், சிநேகிதி வரதராஜனுக்கு; குமுதம் உள்ளிட்ட ஏனைய 7 ம் டாக்டர் ஜவகர் பழனியப்பனுக்கு. இருவரும் கையெழுத்துப் போட்டனர்.
பிரிந்து செல்ல கெடு நெருங்கியதும் வரதராஜன் மனம் மாறினார். ஒப்பந்தம் செல்லாது என்றார். கையெழுத்து போட நிர்பந்தம் காரணம் என்றார்
அதோடு நிற்கவில்லை. வெளிநாட்டு பிரஜையான டாக்டர் ஜவகர் பழனியப்பனுக்கு இந்திய பத்திரிகை கம்பெனியில் பங்குகள் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை; ஆகவே குமுதத்தில் அவருக்கு உரிமை இல்லை என்றார்.
ரிசர்வ் பேங்க், கம்பெனி லா போர்ட் விசாரித்தன. டாக்டர் ஜவகர் பழனியப்பன் வெளிநாட்டு பிரஜை ஆனபிறகு குமுதம் பங்குகளை வாங்கவில்லை; வாரிசு என்ற முறையில் கிடைத்த பங்குகள் வைத்திருக்க அவருக்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கின.
வரதராஜன் அய்யங்கார் விடவில்லை. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்டை - ஈடி - அணுகினார். அதில்தான் முன்பே தீர்ப்பு வந்துள்ளது. அவரது முயற்சிகள் தோற்று, டாக்டர் ஜவகர் பழனியப்பனுக்கு உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன.
டாக்டர் ஜவகருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். கிருஷ்ணா மெய்யம்மை. இவர் எழுத்தாளரும்கூட. சில காலம் எடிட்டோரியல் பொறுப்பை கவனித்த அனுபவமும் உண்டு. அவரும் அவரது தாயார் கோதை ஆச்சியும் குமுதம் வளாகத்துக்குள் நுழைய முடியாதவாறு அப்போது கெடுபிடிக் காட்சிகள் வரதராஜனால் அரங்கேற்றப்பட்டது.
ரூ 25 கோடிக்கு மேல் வரதராஜன் மோசடி செய்ததாக கோதை ஆச்சி தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருந்தது.
எழுபது வயதாகும் குமுதம், இதழ் கோதை ஆச்சி மறைந்தாலும் டாக்டர் ஜவகர் பழனியப்பன் தலைமையில் அடுத்த அத்தியாயத்தை இளமைத் துடிப்புடன் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
சென்னையில் மரணமடைந்தவர் நல்லடக்கம் சென்னை திருவெற்றியூர் நடக்கிறது.. குடும்பத்தாருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல்
கருத்துகள்