பாதுகாப்பு அமைச்சகம் சாகர் இயக்கம் - ஐஎன்எஸ் சாவித்ரி கப்பல் சிட்டகாங்க் சென்றடைந்தது
சாகர் இயக்கத்தின் ஒரு பகுதியாக, வங்கதேசத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பிய இந்தியக் கடற்படையின் ரோந்துக் கப்பல் ஐஎன்எஸ் சாவித்ரி சத்தோகிராம் துறைமுகத்தை 2021 செப்டம்பர் 2 அன்று சென்றடைந்தது.
இந்தியாவில் டிஆர்டிஓ-வால் தயாரிக்கப்பட்ட இரண்டு 960 எல்பிஎம் மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளைக் கொண்டு சென்ற இந்தக் கப்பலுக்கு வங்கதேச கடற்படையால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டின் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் இவற்றை ஐஎன்எஸ் சாவித்ரி கொண்டு சென்றது.
வங்கதேசக் கடற்படை மருத்துவமனையின் தலைமை அலுவலர் மற்றும் டாக்கா மருத்துவக் கல்லூரியின் பிரதிநிதிகள் ஆக்சிஜன் ஆலைகளை பெற்றுக்கொண்டனர்.
இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி, பணிசார்ந்த மற்றும் சமூக பகிர்தல்களில் வங்க தேச கடற்படையினருடன், ஐஎன்எஸ் சாவித்ரி குழுவினர் ஈடுபட்டனர்.
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சாவித்ரி, விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்கரைப் பிரிவின் கீழ் செயல்படுகிறது.
இந்திய அரசின் சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) இலட்சியத்தின் கீழ், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் இந்தியக் கடற்படை, தெற்கு/தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலின் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
100 டன்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனை இலங்கைக்கு இந்தியக் கடற்படைக் கப்பல் சக்தி எடுத்து சென்ற நிலையில், இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்திற்கு மருத்துவப் பொருள்களை ஐஎன்எஸ் ஐராவத் எடுத்து சென்றுள்ளது.
கருத்துகள்