ரூபாய்.34,000 லஞ்சம் வாங்கிய வனத் துறை இளநிலை உதவியாளர் கைது
ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க, 34 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, வனத் துறை இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வனவர் சின்னச்சாமி. இவரும், இவரது மனைவியும் இறந்து விட்டனர். இவர்களது விதவை மகள் சாந்தி, வனத் துறை சார்பில் ஓய்வூதியம் பெறுகிறார். 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஓய்வூதியம், 4 லட்சம் ரூபாய் வரவேண்டிய நிலுவைத் தொகை இருந்ததை வழங்கும்படி, தர்மபுரி மாவட்ட சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் பழனிசாமி, (வயது 54), என்பவரை அணுகிக் கேட்டபோது அவர் 34 ஆயிரத்து 410 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத சாந்தி இது குறித்து, தர்மபுரி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார்.
வெள்ளிக் கிழமை மாலை, 4:00 மணிக்கு அலுவலகத்திலிருந்த பழனிசாமியிடம் சாந்தியின் உறவினர் முருகன் 34 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். அப்போது இலஞ்ச ஒழிப்புத் துறையினர், பழனிசாமியைக் கைது செய்தனர்.விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள்