வீரதீர விருதுகளை சித்தரிக்கும் மெய்நிகர் அருங்காட்சியகத்தை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் தொடங்கி வைத்தார்
வீரதீர விருதுகளை சித்தரிக்கும் மெய்நிகர் அருங்காட்சியகத்தை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் தொடங்கி வைத்தார்
வீரதீர விருதுகள் இணையதளம் (https://www.gallantryawards.gov.in/) நடத்தப்படும் மெய்நிகர் அருங்காட்சியகத்தை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு.அஜய் பட் இன்று (20.01.2022) தொடங்கி வைத்தார். இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தில், வீரதீர விருதை வென்றவர்களின் மனஉறுதி மற்றும் தியாகத்தை சித்தரிக்கும் கதைகள் புதுமையான முறையில் உபயோகிப்பாளர்களுக்கு உகந்த வடிவில் இடம் பெற்றுள்ளது. 3-டி வடிவிலான அனுபவங்கள், காட்சிக் கூடம் அமைத்தல், போர் நினைவகங்கள் பற்றிய சுற்றுலா, போர் ஒருங்கிணைப்பு அறை, வள மையம், செல்பி பூத் மற்றும் சாதனங்களை விளக்கக் கூடிய அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
75-வது சுதந்திர தின பெருவிழாவின் ஒரு பகுதியாக, இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தை பாதுகாப்பு அமைச்சகம், இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் அமைப்பு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் பாஸ்கராசாரியா தேசிய விண்வெளி பயன்பாடு மற்றும் புவி தகவல் நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக அமைத்துள்ளன.
இந்த கூட்டு முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள பாதுகாப்பு இணையமைச்சர் திரு.அஜய் பட், இந்த மெய்நிகர் அருங்காட்சியகம், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரதீரமிக்க போராளிகளின் பங்களிப்பை கவுரவிப்பதோடு அவர்களை பற்றிய கதைகளை நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது மேலும் பல இளைஞர்கள் இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு பாதுகாப்புப் படைகளில் சேர உந்து சக்தியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ராணுவ வீரர்கள், இளைஞர்களிடையே தேசப்பற்றை பரப்பும் முன்மாதிரி நபர்களாகவும், வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்பவர்களாக திகழ்கின்றனர் என்றும் திரு.அஜய் பட் தெரிவித்தார். பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தை நிறைவேற்றும் விதமாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.
கருத்துகள்