இனப் பன்முகத்தன்மை குறித்த உணர்வூட்டல் கருத்தரங்கை தேசிய மகளிர் ஆணையம் நடத்தியது
'இனப் பன்முகத்தன்மை உணர்திறன்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை தேசிய மகளிர் ஆணையம் இன்று நடத்தியது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தில்லி காவல்துறையின் வடகிழக்குப் பகுதிக்கான சிறப்புக் காவல் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது
.
இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புதல் மற்றும் பல்வேறு பழக்கவழக்கங்களுக்கு இடையே பரஸ்பர புரிதலை வலுப்படுத்துவதற்கான உத்திகளை பரிந்துரைத்தல் ஆகியவை இதன் நோக்கங்கள் ஆகும்.
வெளியுறவு மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் திருமதி ரேகா ஷர்மா, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் திருமதி சையத் ஷாஹேசாதி, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத் தலைமை இயக்குநர் திரு பாலாஜி ஸ்ரீவஸ்தவா, மற்றும் காவல் இணை ஆணையர் திரு ஹிபு தமாங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் உணர்வை ஊக்குவிப்பதை இன்றைய கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இது போன்ற நிகழ்வுகள் நமது செயல்களில் கருணையைக் கொண்டு வருவதற்கு நிச்சயம் பங்களிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
ரேகா ஷர்மா பேசுகையில், ஒரே இந்தியா, ஒப்பற்ற இந்தியா என்ற குறிக்கோளை வலியுறுத்தி, தகவல்களை பரப்புவதும், கலாச்சாரம் மற்றும் உணர்வுப் பரிமாற்றம் செய்வதும் காலத்தின் தேவை என்றார். பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையே இந்தியாவின் பலத்தின் அடித்தளம் என்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் அனைவரும் கலாச்சார ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டதாக உணர வேண்டும் என்று திருமதி சர்மா கூறினார்.
காவல்துறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார், மேலும் காவல் துறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக ஆணையத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
கருத்துகள்