பாரீஸ் புத்தகத் திருவிழா 2022-ல் கவுரவ விருந்தினராக இந்தியாவின் பங்கேற்பு நமது பன்முக இலக்கியம் மற்றும் மொழியைக் கொண்டாடும் தளமாக அமையும்: திரு தர்மேந்திர பிரதான்
பாரீஸ் புத்தகத் திருவிழா 2022-ல் கௌரவ விருந்தினராக இந்தியா அழைக்கப்பட்டுள்ளது. இந்த விழா ஏப்ரல் 21 அன்று தொடங்கப்பட்டது. இந்திய அரங்கும் இதில் இடம் பெற்றுள்ளது.
பாரீஸ் புத்தகத் திருவிழா 2022-ல் கவுரவ விருந்தினராக இந்தியாவின் பங்கேற்பு நமது பன்முக இலக்கியம் மற்றும் மொழியைக் கொண்டாடும் தளமாக அமையும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்திய அரங்கில், 15-க்கும் அதிகமான டிஜிட்டல் மற்றும் நேரடி கண்காட்சிகளும், 65 பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள பல்வேறு இந்திய மொழிகளில் 400-க்கும் அதிகமான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கான பத்து படக்கதை புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ரவீந்திரநாத் தாகூரின் கதைகள், மகாத்மா காந்தி குறித்த குழந்தைகளுக்கான புத்தகம் ஆகியவை இதில் அடங்கும்.
‘ஐரோப்பிய கலை மற்றும் கட்டடக்கலையில் இந்தியாவின் செல்வாக்கு’, ‘பெண் எழுத்தாளர்களும் அவர்களின் படைப்பாக்க வெளியும்’ ‘மகாத்மா காந்தியும் ரோமன் ரோலண்டும்: 21ஆம் நூற்றாண்டு கண்ணோட்டம்’ ‘அறிவியலும், ஆயுர்வேதமும்‘ ‘பல மொழிகள் ஒரு இலக்கியம்‘ ‘சமகால படைப்புகளில் பருவநிலை மாற்றம் குறித்த அக்கறை’ போன்ற தலைப்புகளில் இலக்கிய அமர்வுகள் இந்தக் கண்காட்சியில் நடைபெற உள்ளன.
கருத்துகள்