நாடு முழுவதும் உள்ள 700-க்கும் அதிகமான இடங்களில் ஏப்ரல் 21 அன்று தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திருவிழா ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 700-க்கும் மேற்பட்ட இடங்களில் 21 ஏப்ரல் 2022 அன்று நாள் முழுவதும் ‘அப்ரண்டிஸ்ஷிப் மேளா’ எனும் தொழில் பழகுநர் பயிற்சி திருவிழாவை பயிற்சி இயக்குநரகத்துடன் இணைந்து ஸ்கில் இந்தியா நடத்துகிறது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை பணியமர்த்துவதை ஆதரிப்பதும், சரியான திறமைகளை கண்டெடுப்பதில் முதலாளிகளுக்கு உதவுவதும், பயிற்சி மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதன் மூலம் அதை மேலும் மேம்படுத்துவதும் இம்முயற்சியின் நோக்கம் ஆகும்.
மின்சாரம், சில்லறை விற்பனை, தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணு பொருட்கள், வாகன உற்பத்தி போன்ற 30-க்கும் மேற்பட்ட துறைகளில் செயல்படும், நாடு முழுவதும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கேற்பை இந்நிகழ்ச்சி காணும்.
மேலும், வெல்டர், எலக்ட்ரீசியன், பராமரிப்பு பணியாளர், அழகு சாதன நிபுணர், மெக்கானிக் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஈடுபடவும், தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு கிடைக்கும்.
2015-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான தேசியக் கொள்கை 2015, திறமையான பணியாளர்களுக்கு போதுமான ஊதியத்துடன் ஆதாயமான வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வழிமுறையாக தொழில் பழகுநர் பயிற்சியை அங்கீகரிக்கிறது.
நாட்டில் உள்ள நிறுவனங்களால் பணியமர்த்தப்படும் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகளை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் எடுத்துள்ளது. திறமையான பணியாளர்களுக்கான தேவையில் உள்ள இடைவெளியை நிரப்புவதும், இந்திய இளைஞர்களின் லட்சியங்களை பூர்த்தி செய்வதும், பணியில் பயிற்சி வழங்குவது மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவது ஆகியவை அமைச்சகத்தின் நோக்கமாகும்.
குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், ஐடிஐ மாணவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் தொழிற் பழகுநர் பயிற்சி திருவிழாவில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
கருத்துகள்