மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் தர்மபுரி கள அலுவலகம் சார்பில் சூளகிரியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குட்பட்ட மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் தர்மபுரி கள அலுவலகம், சூளகிரியில் உள்ள பெருமாள் மணிமேகலை பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் காவிரிப்பட்டிணம் கிளையுடன் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய கிருஷ்ணகிரி அஞ்சல் துறை கண்காணிப்பாளர் திரு பி ராகவேந்திரன், யோகா கலை, மனித குலத்திற்கு இந்தியா வழங்கிய நன்கொடை என்றார். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது, இளைஞர்களிடையே யோகா பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்த உதவியிருப்பதாக கூறினார். யோகாவை நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கடைப்பிடித்தால், உடலுக்கும், மனதிற்கும் மிகுந்த பயனளிக்கும் என்றும் தெரிவித்தார். யோகா பயிற்சி, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்த உதவும் என்று குறிப்பிட்ட அவர், ஏராளமான சுகாதார பலன்கள் மிகுந்த யோகாவை உலகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் திரு பி ராகவேந்திரன் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, சூளகிரியில் நடைபெற்ற யோகா விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு கிராமிய வங்கியின் மண்டல மேலாளர் திரு என் சீராளன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பிஎம்சி தொழில்நுட்ப குழும கல்வி நிறுவனங்களின் இயக்குனர் திரு என் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ் சித்ரா சூளகிரி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் வெண்ணிலா, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் காவிரிப்பட்டிணம் கிளை செயலாளர் திரு என் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்