தமிழ்நாட்டில் உள்ள 2 தொழில் குழுமங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாட்டில் கட்டுமான ஒப்பந்ததாரர், ரியல்எஸ்டேட், மற்றும் விளம்பரம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள 2 தொழில் குழுமங்களில் வருமான வரித்துறையினர் 06.07.2022 அன்று சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது, முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான, பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் இந்த இரு நிறுவனங்களும், கடந்த சில ஆண்டுகளாக போலியான கொள்முதல் மற்றும் செலவு கணக்குகளை காண்பித்து, வரிவிதிக்கத்தக்க வருமானத்தை மறைத்தது, ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் ஒன்று மேற்கொண்டதாக கூறப்படும் போலியான கொள்முதலுக்கு வழங்கப்பட்ட பணத்தை, ரொக்கமாக திரும்ப பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. கூட்டு முயற்சிகளில் லாப பகிர்வு செய்து கொண்டதாக கூறியும், பெருமளவு வருவாய் மறைக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இரண்டாவது நிறுவனம், பல்வேறு போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் போலி கொள்முதல் துணை ஒப்பந்த செலவுகளை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. முக்கியமான ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆவணங்களை பதுக்கி வைப்பதற்காக, இந்த நிறுவனம் ரகசிய மறைவிடங்களை பயன்படுத்தியதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும், ரூ. 500 கோடிக்கு மேற்பட்ட கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள்