அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன்,
அவரது உடல் நலம் விசாரித்தார் பின்னர் அவரது சந்திப்பு முடிந்த நிலையில் செய்தியாளர் மத்தியில் பேசினர் “ எங்கள் மூத்த அண்ணன் இவர், எனவே மரியாதை நிமித்தமாக பார்ப்பதற்காக வந்தேன். அரசியல் ரீதியாகவும் கலந்து பேசினோம்” எனத் தெரிவித்தார்.
நீங்களும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டுமெனத் தேவர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா நடராஜன், “ அதிமுகவிலுள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள் தான். எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது ஜாதி, மதம் பார்த்ததில்லை. அந்த அடிப்படைக் கொள்கை இப்போது வரை எனது மனதில் உள்ளது. அதிமுக அனைத்து ஜாதி, மதத்தை ஒன்றாக நினைக்கும் இயக்கமாகும். அந்த வழியில் எனது பயணம் தொடரும்” எனக் கூறியவர்.
மேலும் ஒரு இயக்கத்தில் சில நேரங்களில் இது போல சோதனை உருவாகும், பின்னர் அது சரியாகிவிடும். அதுபோல இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் சரியாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அனைவரும் இணையும் சூழல் உருவாகும். ஓபிஎஸ், ஈபிஎஸ் என யார் பக்கமும் நான் இல்லை. நான் தொண்டர்களின் பக்கம் தான் உள்ளேன். தொண்டர்களின் எண்ணப்படி எனது தலைமையில் அதிமுக விரைவில் இயங்கும் என தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் புறப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “அதிமுக இரு தனித்தன்மை கொண்டது. ஒன்று ஏழைகளுக்கான கட்சி , இரண்டு யார் வேண்டுமானலும் இணையலாம் சம வாய்ப்பு வழங்கப்படும். அதன் மூலம் தான் டாக்டர் ஹண்டே போன்றவர்கள் கட்சியில் உயர்ந்தனர். ஒற்றைத் தலைமை , இரட்டை தலைமை என்பதெல்லாம் முக்கியமல்ல. ஒற்றைத் தலைமை இருந்து என்ன சாதித்து விட்டார்கள்? கட்சியின் உருவ அமைப்பில் இன்று மாறுதல் ஏற்படலாம். எம்ஜிஆரே கட்சியில் 3 பிறவி எடுத்தார். பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக இடைக்காலம், கடைக்காலம் என்பதெல்லாம் தற்காலிகம்தான் .
எம்ஜிஆர் தனது காலத்தில் பொதுச்செயலாளராக இருந்தாரா..? இல்லை மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பது தான் முக்கியம். பொழுது விடியும் போது தான் நாடகத்தின் கிளைமாக்ஸ் தெரியவரும். இப்போதே கூற முடியாது. எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து எம்ஜிஆரை கட்சியை விட்டு வெளியேற்றினர், அதனால் என்ன நடந்து விட்டது ? கட்சியில் இன்னும் பல குழப்பங்கள் ஏற்படும் ? அதன்பின்பு தான் தீர்வு ஏற்படும் . அதிமுக விசயத்தில் பாஜக தலையிட வேண்டிய அவசியமில்லை. பாஜக தலையிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது. எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர்கள்தான் அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர்.
தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகள் முறைப்படி உறுப்பினர்களால் தேர்வானர்கள் இல்லை. சாணியில் பிள்ளையார் செய்து, அந்தப் பிள்ளையாரை செய்தவர்களே அதை விழுந்து கும்பிடுவது போலத் தான் தற்போது பொதுச்செயலாளர் நியமனம் உள்ளது. கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை ஆற்றில் நுரை போல மேலாக தெரிகிறது. ஆனால் கீழ்மட்டத்தில் எடுக்கும் முடிவுதான் முக்கியம். மேல்மட்டத்தில் உள்ள பிரச்சனை காற்றில் நுரை பறப்பது்போல பறந்துவிடும். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறுவதெல்லாம் கட்டுக்கதை. சும்மா வாயால் சொல்லுகின்றனர் . ஆதார் அட்டை மூலம் கணக்கெடுத்தல் தான் உண்மையான தொண்டர்கள் எண்ணிக்கை தெரியவரும். கட்சியில் ஒன்றரை கோடி... மூன்று கோடி.. தொண்டர்கள் எல்லாம் கிடையாது. தற்போதைய சூழலில் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். எம்ஜிஆரின் உண்மை வாரிசு தொண்டர்கள் தான். மேல்மட்ட பிர்ச்சனை குறித்து தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம், அவை தீர்ந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்
கருத்துகள்