பறக்கைக் கால்வாய் ஆக்கிரமிப்பை இரண்டு மாதத்தில் அகற்றி விட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னர் தான் ஆக்கிரமிப்புகளை அவற்றுவதென்பது,
ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் செயல் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை காட்டமாகத் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்ததில், கன்னியாகுமரி மாவட்டம் குளத்தூரில் உள்ள பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலைமை நீதிபதியின் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர்நிலைகள், வறண்ட நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்பால் தமிழகத்தில் சூழலியல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
மேலும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் முழுமையாக அகற்றப்படாதது ஆச்சரியமளிக்கிறது எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு பாரபட்சமின்றிச் செயல்பட வேண்டும் என்றும் கூறினர். நீர் நிலையங்களின் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் மற்றும் அலுவலர்கள் உதவி இல்லாமல் நடைபெறாதென்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றனர். சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விட்டு பிறகு மாற்று இடம் தந்த பின்னர் தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்பது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் குறிப்பிட்டனர். நீதிமன்ற உத்தரவுக்கு பின் எவ்வித மாற்று ஏற்பாடுமின்றி விரைவாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை எனவும், பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்பை இரண்டு மாதத்தில் அகற்றி விட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு மூலம் தெரிவித்தனர். மேலும் நீர்நிலைகளை நிலமாற்றம் செய்ய அனுமதி கொடுப்பதும் CMDA. அங்கு கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதும் CMDA.வில் தொடர்ந்து ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து கொண்டுள்ளது. சமீபத்தில் கூட சென்னை நந்தம்பாக்கத்தில், அடையாறு ஆற்றின் ஒரு பகுதியாக உள்ள நிலத்தை, தனியார் நிறுவனங்கள் குடியிருப்பு கட்டும் திட்டத்துக்காக வகைப்பாடு மாற்றக் கோரும் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்ற அறப்போர் இயக்கத்தின் கோரிக்கையால் நில மாற்ற அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு அரசாங்கமே நீர்நிலைகளை நிலமாற்றம் செய்து அதில் காவல்நிலையம் கட்டியுள்ளது தான் இதில் உச்சகட்ட அக்கிரமம். அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கால் அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பது தான் தமிழக அரசின் நோக்கமாக இருந்தால் இந்த காவல்நிலையத்தை இடித்து அந்த நல்ல பணியை ஆரம்பித்து வையுங்கள். என்ற கோரிக்கை மக்கள் மத்தியிலிருந்து வருகிறது.
கருத்துகள்