ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில்
தமிழ்நாட்டில் 3000 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்ற நிலையில் வெளி மாநிலத்தின் பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இதுவரை இயக்கப்படுகிறது. வெளி மாநிலத்தின் ஆம்னி பதிவெண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும் மாநிலப் போக்குவரத்துத் துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் வெளி மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் அறிவுறுத்தியதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டிருந்ததன் அடிப்படையில், தமிழநாடு அரசு 17-06-2024 ஆம் தேதி வரை அதற்கான அனுமதியை வழங்கியது.
அதனையடுத்தி, சனி, ஞாயிறு, மற்றும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை என தொடர் அரசு விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி 18-06-2024 ஆம் தேதி காலை வரை தமிழ்நாட்டில் வெளிமாநிலப் பேருந்துகளை இயக்க அனுமதியளித்திருந்தநிலையில், அதற்கான அவகாசம் நிறைவடைந்தது, வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் பயணம் செல்ல முன்பதிவு செய்துள்ள பொதுமக்கள் அதனை உடனே ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விதிகளை மீறி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களைச் சமர்ப்பித்து விதிமுறைகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் வாகனங்களை இயக்கி வருகின்றனர். பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும் பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் பெற முடியாது போய் நிராகரிக்கப்படும். அதனால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முறைகேடாகவும், விதிகளை மீறியும் இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கத்தை இனி அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள் எவரும் அத்தகைய விதிகளை மீறி தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
அத்தகைய விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்திகள் இனி முடக்கப்படும் என்பதால் அதில் பயணிக்க வேண்டாம். இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது’ எனக் கூறப்பட்டுள் ளது.
கருத்துகள்