தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடலையூர் சாலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்
வாகனப் பதிவு, உரிமம் பெயர் மாற்றம், புதிய ஓட்டுநர் உரிமம், பழைய ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றிற்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார்கள் சென்ற நிலையில், ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இரண்டு பேர், ஆட்டோ ஓட்டுனர்கள் போல மாறி கைலியுடன், காக்கிச்சட்டை அணிந்து வந்தனர். லைசன்ஸ் பெற வேண்டும் எனவும், அது தொடர்பாக யாரைச் சந்திக்க வேண்டும், எவ்வளவு ரூபாய் செலவாகும் என விசாரித்தனர். அது குறித்து ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள் கூறிய பதிலைக் கேட்டுவிட்டு சிறிது நேரம் வெளியே காத்திருந்தனர். மாறுவேடத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் போல் அவர்கள் இருவரும் வந்ததால் ஆர்.டி.ஓ அலுவலகப் பணியாளர்கள் யாருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. அடையாளமும் காண முடியவில்லை.
இருவரும் ஆர்டிஓ அலுவலகத்தின் வெளியில் காத்திருந்த சிறிது நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் துனைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால், ஆய்வாளர் அனிதா தலைமையிலான குழுவினர் அதிரடியாக ஆர்டிஓ அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அலுவலகம் மூடப்பட்டது. தொடர்ந்து யாரையும் உள்ளே வரவோ அல்லது வெளியே செல்லவொ விடாமல் தடுத்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அங்கிருந்த புரோக்கர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அலுவலகத்திலிருந்த மேஜை, டிராயர், பீரோக்களை திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்டது பணம்
ஆட்டோ ஓட்டுனர்கள் போல கைலி கட்டி வந்தவர்களும் சோதனையில் ஈடுபட்ட போது தான் அவர்களும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனத் தெரிய வந்தது. அங்கிருந்த ஆவணங்களையும் கம்யூட்டர் பதிவுகளையும் சரிபார்த்தனர். இந்த சோதனையின்போது ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாளர்கள் மற்றும் புரோக்கர்களிடமிருந்து ரூபாய்.1,16,910- ஐக் கைப்பற்றினர். கழிவறையில் வீசப்பட்டிருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்துகள்