மதுரை மத்திய சிறையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சிறைக் கைதிகள் பொருட்களைத் தயாரிக்க மூலப் பொருட்கள்
வாங்கியதில் 1.63 கோடி ரூபாய்க்கு முறைகேடு காரணமாக தற்போது புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஊர்மிளா, வேலூர் சிறையில் அலுவலர் தியாகராஜன், பாளையங்கோட்டை சிறையில் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம். சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
மதுரை மத்திய சிறையில் மோசடி விவகாரம் தொடர்பாக சிறைத்துறை யின் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை தலைமை இயக்குநர் ஜெனரல் உத்தரவு. மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக மாஸ்க், கையுறை போன்ற மருத்துவப் பொருட்கள், அலுவலகக் கவர்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலங்கள், நீதிமன்றங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பபடுகிறது.
இந்த விற்பனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை போலி பில் தயாரித்து பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக எழுந்த புகார் அடிப்படையில் அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அலுவலர்கள் ஆவணங்களை ஆய்வு செய்து இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்ததையடுத்து
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்தது தெரிய வந்ததன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடைபெற்ற நாட்களில் சிறைத் துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஊர்மிளா, மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றிய வசந்தகண்ணன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அலுவலராக உள்ள தியாகராஜன் மற்றும் மூலப் பொருட்கள் வழங்குவதில் மோசடி செய்த மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஜாபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் மதுரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே தற்போது புதுக்கோட்டை மத்திய சிறையில் கண்காணிப்பாளரான ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், வேலூர் சிறையில் நிர்வாக அலுவலர் தியாகராஜன் ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை தலைமை இயக்குநர் ஜெனரல் மகேஷ்வர் தயாள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்துகள்