மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
உலகப் புகழ்பெற்ற பாண்டிய நாட்டின் பேரரசி மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோவிலின் சித்திரைத் திருவிழா இன்று ஏப்ரல் மாதம்.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தைச் சுற்றியுள்ள கம்பத்தடி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சுவாமி சன்னதியிலிருந்து ஸ்ரீ மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனியாக வெள்ளி சி்ம்மாசனத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரம் முன்பு வெள்ளி சிம்மாசனத்தில் காலை 10.35 மணியளவில் எழுந்தருளினர். யாகசாலை அமைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.48 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தர்ப்பைப்புல், மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கொடிமரத்தின் மேலிருந்து மலர்கள் தூவினர்.
இதில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், கோவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், தீப, தூப ஆராதனைக்குப்பின் மதியம் 12 மணியளவில் கொடிமரம் முன்பிருந்து சுவாமி, அம்மன் புறப்பட்டு, சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர். இன்றிரவு கற்பகவிருட்சம் வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மன் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளுவர். திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர்.
முக்கிய விழாக்களான ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பாண்டிய நாட்டின் பேரரசி ஆவலாய் அரசி மகாராணி பட்டாபிஷேகமும் மே மாதம் 6-ஆம் தேதி இரவு 7.35 மணியளவில் நடைபெறும். மே மாதம் 7-ஆம் தேதி ஸ்ரீ மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் வீதி உலா நடைபெறும்.
10-ஆம் நாள் மே மாதம் 8-ஆம் தேதி காலை 8.35 மணியளவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். மே மாதம் 9-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும். மே மாதம் 10-ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தெய்வேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
கருத்துகள்