வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.3.59 கோடி சொத்து குவித்த மாநகராட்சி பொறியாளர் அவர்
மனைவி மீது வழக்குப்பதிவு. திருநெல்வேலி மாநகராட்சியின் பொறியாளர் அவரது மனைவி கடந்த ஆறாண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.3.59 கோடி சொத்துக் குவித்ததாக
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சாந்திநகர் 28 வது தெருவில் வசிப்பவர் லெனின்(வயது 54). இவர் திருநெல்வேலி மாநகராட்சியில் உதவிப் பொறியாளராக 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் பணியாற்றுகிறார்.
இவர் மனைவி சாந்தகுமாரி திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் உதவி பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
இருவரும் அரசு ஊழியர்கள் என்ற வரையறைக்குள் வருகின்றனர். இவர்களுக்கு பாபின் மகன், பாபிலா பிளஸ்சி மகள் உள்ளனர். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆய்வாளர் சுதா விசாரணை நடத்தியதில் லெனின் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்தது உறுதியானது. அவர்களது சொத்து மதிப்பு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியில் ரூபா.73 லட்சத்து 4 ஆயிரத்து 579 ஆக இருந்தது. ஆறாண்டு கழித்து 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதியில் அவர்களது சொத்து மதிப்பு ரூபாய்.5 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 83 ஆக உயர்ந்தது. ஆறாண்டுகளில் அவர்களது வருமானம் ரூபாய்.2 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 355-ஆக இருக்க வேண்டும். செலவு 98 லட்சத்து 96 ஆயிரத்து 440 ஆக இருந்தது.இதன் அடிப்படையில்
வருமானத்திற்கு அதிகமாக, ரூபாய்.3 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 589 க்கு ஊழல் செய்து சொத்துச் சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மதிப்பிட்டுள்ளனர். அதன்படி லெனின் மற்றும் சாந்தகுமாரி ஆகியோர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் போல பல லட்சம் அரசு ஊழியர்கள் கதை உள்ளது ஆனால் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா செயல்படும் வரை காத்திருக்க வேண்டும்.
கருத்துகள்