யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டில் சிவச்சந்திரன் எனும் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் இந்திய அளவில் 23 ஆம் இடம் பெற்றுள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு- 2024 இறுதி முடிவுகள் இன்று ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.
கடந்தாண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வும் செப்டம்பர் மாதத்தில் முதன்மைத் தேர்வும், தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் நேர்காணலும் நடைபெற்ற நிலையில், இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை அறியலாம்.
இதில், இந்திய அளவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே எனும் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை சிவச்சந்திரன் எனும் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 23 ஆம் இடம் பெற்றுள்ளவர், தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவராவார்.
இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், “யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது” என்றார்.
மோனிகா என்ற மாணவி அகில இந்திய அளவில் 39 ஆம் இடம் பெற்றுள்ளார். இவரும் நான் முதல்வன் திட்டத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 134 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற நிலையில் 50 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் என்ற தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்த்த சரண்யா சரவணன் இந்திய அரசுப்பணித் தேர்வில் இந்திய அளவில் 125-வது இடத்தைப் பிடித்து IAS தேர்வாகி உள்ளார் இவர் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சன் அண்ணன் செல்வராஜ் பேத்தி ஆவார்.
கருத்துகள்