குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி வாக்குகள் சேகரிக்க தமிழ்நாடு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
சுதர்சன் ரெட்டி தான் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என உறுதி கூறினார்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி சார்பில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு கோரும் விதமாக சுதர்சன் ரெட்டி சென்னை வந்தார். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்றார் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கோரும் நிகழ்வு நடைபெற்றதில், சுதர்சன் ரெட்டியை அறிமுகம் செய்து வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது: இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, தமிழ்நாட்டிற்கும், தமிழக உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அவரை நக்சல் ஆதரவாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் விமர்சிக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த திறனற்ற நிலையை மறைக்க, நீதிபதிமேல் பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார்.
அரசியல் எதிரிகளைப் பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது. தன்னாட்சி அமைப்புகளை பாஜகவின் துணை அமைப்புகளாக மாற்றி வருகிறது. அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது. இந்தச் சூழலில், இந்தியாவின் அடிப்படை கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி,வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவரை ஆதரிப்பது தான் நம் முன்னால் இருக்கும் கடமை. ஆனால், பாஜகவோ, தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராகவே அனைத்து செயல்களையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடியை அணிந்து வந்து ஆதரவு கேட்கிறது. இதெல்லாம் பழைய தந்திரம். எனவே, சட்ட நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதர்சன்ரெட்டி நமது இந்திய ஜனநாயகம், நாடாளுமன்ற மரபுகள், மக்களாட்சி, அரசியலமைப்பு ஆகியவற்றைகா காக்க குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்று வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். பின்னர், ஆதரவு கோரி சுதர்சன் ரெட்டி பேசியதாவது: திராவிட இயக்கப் பாரம்பரியம் செழித்த தமிழழ்நாடு பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட சிறந்த ஆளுமைகள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வழியில் மாநில உரிமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார். விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வி, சுகாதாரம், புத்தாக்க சிந்தனை, தொலைநோக்கு பார்வையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியா என்பது ஒரு நாடுதான். ஆனால், மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. நீதிபதியாக இருந்தபோது அரசியலமைப்பை நிலை நிறுத்திக் கொண்டிருந்தேன். இப்போது, அரசியலமைப்பை காக்க குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். நான் வெற்றி பெற்றால், அரசியலமைப்புச் சட்டத்தை முழுமூச்சுடன் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சன் ரெட்டி, ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் அப்துல் கலாம் ஆகியோரைப் போல நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு போட்டியிடுகிறேன். அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஆதரவு கோருவேன்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, விசிக தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் நசீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில்
இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘நக்சல்,மாவோயிஸ்டுகளின்’ ஆதரவாளர் என விமர்சித்துள்ளார்.
ஆனால் திமுகவின் இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவரை
மனிதநேயச் செயற்பாட்டாளர் எனவும், பிறர் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பவர் எனவும், பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் நலனில் அக்கறை கொண்டோர்.. போன்றவர்களுக்கு தானே இந்த முத்திரையை பாஜக குத்துகிறது, எனவும் ஆதிக்க சமூகமும், அதிகார வர்க்கமும்!
சரி, சுதர்ஷன் ரெட்டிக்கு ஏன் இந்த முத்திரையை குத்தினார் அமித்ஷா? என கேள்வி எழுப்புகிறது அதற்கு காரணமும் கூறுகின்றனர்.
சத்தீஸ்கரின் இயற்கை செழித்தோங்கும் மலை பிரதேசங்களில் கார்ப்பரேட்டுகள் காலூன்றுவதற்காக பழங்குடிகளை அப்புறப்படுத்த திட்டமிட்டதற்காக அரசு சம்பளத்தில் உண்டு கொழுத்த சில தலைவர்கள் அங்கு காவல்துறையைப் பயன்படுத்தி படுதோல்வி கண்ட அதிகார வர்க்கம் பழங்குடியினர் சிலருக்கு ஆசைகாட்டி பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளித் தந்து மக்களுக்கான போராளிகளை அந்த மக்களில் சிலரையே கூலிப் படையாக்கியது.
அந்தக் கூலிபடைக்கு சல்வா ஜூடும் எனப் பெயரிட்டது.
இதன் அர்த்தம் அமைதிப் பேரணி. அவர்கள் செய்யும் கொலைகள் ஊடகங்களாலும், அரசாலும் புனித வேட்டை என கொண்டாடப்பட்டது. இந்த கொலைகார சல்வாஜூடும் வேட்டையாடி 400க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்று குவித்ததில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகினர்.
இதை இந்தியா முழுமையும் அனைவரும் எதிர்த்தனர். ஆனால், அரச அதிகாரம் அடங்க மறுத்தது.
இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. இதைத் தொடர்ந்து ஜூலை மாதம் 2011- ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மாவோயிஸ்டு போராளிகளுக்கு எதிரான சால்வா ஜுடும் இயக்கம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது. அத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் இருவர் ஒருவர் சுதர்சன் ரெட்டி, மற்றொருவர் எஸ்.எஸ். நிஜ்ஜார்.
ஆக, இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி துணை குடியரசுத் தலைவருக்காக நிறுத்தப்படுவதே பெருமை அல்லவா? என திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெருமிதம் கொண்ட போதும் போபால் விஷவாயுக் கசிவு குறித்து அவர் விசாரணை நடத்த மறுத்தது குறித்து அதில் மறைந்திருந்த ஊழல் குறித்து யாரும் பேசவில்லை . என்பதே உண்மை என்ற நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தமிழ் நாட்டின் சி.பி.ராதாகிருஷ்ணன் தே ஜ கூட்டணி சார்பில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்பதே எதார்த்த நிலை.



கருத்துகள்