இணையதள மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 205 பேர் கைது
பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 205 சைபர் குற்றவாளி களை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது.
தேசிய இணையவழி குற்றப் புகார் பதிவேற்ற https://cybercrime.gov.in தளத்தில் பதிவான புகார்களை சென்னை காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு தீவிரமாக ஆய்வு செய்ததில், பணத்தாசை காட்டி பொது மக்களின் வங்கிக் கணக்குகளை பெறும் சைபர் குற்றவாளிகள், அவற்றை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் தெரியவந்ததையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் கடந்த 6. மற்றும் 7-ஆம் தேதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு வங்கிகளில்
செயல்பட்டு வந்த 310 'மியூல்' வங்கிக் கணக்குகள் (மோசடிக்கு பயன்படுத்தப்படும் வாடகைக் கணக்குகள்) கண்டறியப்பட்டன. அதன் மூலம் நடந்த பணப் பரிவர்த்தனைகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், இணைய மோசடிகளுக்காகவே இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. சென்னை, கோயம்பத்தூர் மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் நடந்த இந்த சோதனையில், இந்த நெட்வொர்க்குடன் தொடர்புடைய 205 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்து சைபர் க்ரைம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை முன் பின் தெரியாத வெளிநபர்கள் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சிறிய அளவிலான கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பணத்தைப் போட்டு எடுக்க அனுமதிப்பது சட்டப் படி குற்றமாகும். இத்தகைய செயல் களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்" என சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.



கருத்துகள்