இளம், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அதிக அளவிலான வாய்ப்புகள், வலுவான சர்வதேசத் தொடர்புகள் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம், 2026 ஆகஸ்ட் 21 அன்று புதுதில்லியில் உள்ள கடமை மாளிகை-2-ல் நடைபெற்றது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்தத் திரைப்பட விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவாக, வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2026 நவம்பர் 20 முதல் 28 வரை, கோவாவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் எல் முருகன், இளம் மாணவர்கள், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இந்தியத் திரைப்படத் துறையின் அதிகம் அறியப்படாத சாதனையாளர்களுக்கு, அதிக வாய்ப்புகள் வழங்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இளம் திறமையாளர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், அனுபவம் வாய்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், உலகளவிலான திரைப்படச் சமூகத்துடன் இணைந்து செயல்படவும், இந்தத் திரைப்பட விழா ஒரு தளத்தை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். அதேவேளையில், சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள், முன்னணி படைப்பாற்றல் திறமையாளர்களை, இந்தியாவிற்கு அழைத்து வருவதன் மூலம், திரைப்படத் துறையில், சர்வதேச அளவிலான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான மத்திய தகவல், தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவின் படைப்பாற்றல் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அது சார்ந்த தொழில்களை வலுப்படுத்தவும், பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் திறமை, புதுமை, உலகளவில், ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இளம், வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள், அனுபவம் வாய்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுடனான கலந்துரையாடல்கள், அர்த்தமுள்ள வழிகாட்டுதல் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஒத்துழைப்பு, தொழில்முறை பரிமாற்றத்திற்கான வழிவகைகளை வலுப்படுத்துவதுடன், இந்தியத் திரைப்படத்துறையின் பன்முகத்தன்மை, வலிமையை வெளிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் எல் முருகன் சுட்டிக்காட்டினார்.


கருத்துகள்