மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய அளவிலான மாநாடு
மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்த, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர்களுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தேசிய அளவிலான மாநாட்டை ஏற்பாடு செய்தது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவின் மென்சக்தியும் படைப்பாற்றல் பொருளாதாரமும் வலிமையின் ஏழு தூண்களான சப்ததாராவில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் பரந்த ஆக்கத்திறன் ஆற்றலைப் பயன்படுத்தவும், பொதுத் தகவல்தொடர்பை வலுப்படுத்தவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வலுவான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பு தேவை என்பதைச் செயலாளர் வலியுறுத்தினார். கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய படைப்பாற்றல் பொருளாதாரம், வேலைவாய்ப்பை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை மேம்படுத்தவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
அடிப்படை வசதிகள், திறன் மேம்பாடு, பிராந்திய அளவிலான உள்ளடக்க உருவாக்கம் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த சூழலமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வேவ்ஸ் 2027, வேவ்ஸ் பஜார், வேவ்எக்ஸ் போன்ற தேசிய அளவிலான தளங்கள், நாடு முழுவதிலும் உள்ள படைப்பாளிகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்குச் சந்தைகள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய கூட்டணிகளை அணுகுவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கக்கூடும்.
மாநிலம் சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்குவதிலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் மண்டல அலுவலகங்கள், மாநிலங்களின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைகள், தூர்தர்ஷன் மற்றும் ஆகாசவாணியின் மண்டலப் பிரிவுகள் ஆகியவற்றிற்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் செயலாளர் வலியுறுத்தினார்.
அமைச்சகத்துடன் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்படவும், படைப்பாற்றல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தீவிரமாகப் பங்கேற்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக மாநாட்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.




கருத்துகள்