தஞ்சாவூர் மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் பாரதிய நியாய
சன்ஹிதாவின் பல பிரிவுகள், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 4 அன்று சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து திமுகவின் உதயநிதி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்கூட்டிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்,
மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் ஆஜராகி, உதயநிதியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் எண்ணமில்லை என்றும், விசாரணைக்குப் பிறகு அன்றைய தினமே காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்படுவார் எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிமன்றம், விசாரணையை முடித்தவுடன் அன்றே காவல் நிலைய பிணையில் விடுவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், தேவையான போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உதயநிதியையும் அறிவுறுத்தியது.
தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். காவல் நிலையப் பிணை என்பது பொதுவாக ஜாமீன் வழங்கத்தக்க குற்றங்களில் காவல் நிலையத்திலேயே காவல்துறை அலுவலர்களால் வழங்கப்படும் பிணை. இது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பாமல் விடுவிப்பதைக் குறிக்கிறது. ஆனால் வழக்கு முடிந்துவிட்டது என்று அதற்கு அர்த்தமல்ல. விசாரணை தொடரும், தேவைப்பட்டால் மேலும் அழைப்பு சம்மன் விடுக்கப்படலாம், புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அல்லது விசாரணையில் ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டால் பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
இந்த வழக்கில் அரசு தற்போது நீதிமன்றக் காவல் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தாலும், விசாரணை முழுமையாக முடியும் வரை சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரலாம். எனவே காவல் நிலைய பிணை உடனடி விடுதலையை உறுதிசெய்தாலும், எதிர்காலத்தில் இந்த வழக்கில் எந்தவிதமான மேலதிக நடவடிக்கையும் இருக்காது என்று உறுதியளிக்க முடியாது. தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு காவல் நிலைய பிணை வழங்கப்பட்டதால் இந்த வழக்கில் எதிர்காலத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இதுவே சட்டத்தின் நிலை.அது சரி இந்த எழு வினா பொதுமக்கள் தரப்பு சார்பில் வருவது
அடக்க முடியாத ஆத்திரம், வெறுப்பு,எதிர் கட்சி தலைவரான திமுகவின் வன்மம் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் மீது!
ஏன் வருகிறது, தேர்தல் முடிவு வந்த போதே அவரை தேற்றி வழிக்கு கொண்டு வருவதற்கே தலைமைக் குடும்பம் தடுமாறிவிட்டதாம். மற்ற பல சீனியர் தலைவர்கள் வந்து சமாதானப்படுத்திய போது, ’’எடப்பாடி முதல்வராவதைக் கூட ஏற்றுக் கொள்வேன். விஜய் ஒரு போதும் முதலமைச்சர் ஆகக் கூடாது’’ என உதயநிதி கோபத்தின் உச்சத்திற்கு போனதால் தான், நடக்கக் கூடாதவை எல்லாம் அரங்கேறி, எல்லாம் பெய்லியர் ஆனது.
அதன் பின்னர் ஆட்சி கவிழ்ப்பு அசைன்மெண்டிற்கு செந்தில் பாலாஜியை களம் இறக்கிவிட்டு துபாய்க்கு பறந்தார். தற்போது விஜய் குறிவைத்தழிக்கும் உதயநிதியின் பகை அரசியல் தன் தலையில் தானே கொள்ளியிடும் தன்னழிப்பு அரசியலுக்கு வித்திட்டுக் கொண்டுள்ளது.
அரசியல் வாழ்க்கையில் பொது நலனுக்காகவோ, அநீதியை தட்டிக் கேட்டோ ஒருவர் கைதாவது பெருமைக்குரிய விஷயம்.
ஆனால், கண்ணியக் குறைவான ஆபாச பேச்சுக்காக ஒரு அரசியல் தலைவர் கைதாவது அவமானம்!
உதயநிதி மேல் பதியப்பட்ட வழக்குகளில் அவர் கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன;
வார்த்தைகளாலோ, சைகைகளாலோ அல்லது செயல்களாலோ பெண்ணின் கண்ணியத்துக்கும் மானத்துக்கும் பங்கம் விளைவித்தல். (BNS 79)
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைத் தடுத்தல். (2002 – பிரிவு 4)
பொது அமைதியை சீர்குலைத்து குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் ஒருவரை திட்டமிட்டே அவமதிப்பது. (BNS 352)
ஆக, காவிரி தண்ணீரை திறக்க மறுக்கும் கர்நாடகத்தைக் கண்டித்தோ, இதில் நடு நிலை தவறி நடக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவோ போராடி கைதாகி இருந்தால், அது திமுக தொண்டர்களுக்கும் பெருமை தந்திருக்கும்.
ஆபாசமாகப் பேசி கைதான ஒரு தலைவருக்கு ஆதரவாக தெருவில் இறங்கி போராட வேண்டிய அவலச் சூழல் இன்றைய திமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது வருத்தமாகத் தான் உள்ளது.
தவெக ஆட்சியை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் வெறியாக உள்ள உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கவுள்ள (ஆகஸ்ட்5,2026) பட்ஜெட் கூட்டத் தொடரில் சில அசம்பாவிதங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாகவும் பரவலாக பேசப்பட்டு வந்த சூழலில் தான் இந்த ஆபாச பேச்சு விவகாரத்தை உதயநிதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வாய்ப்பாக விஜய் பயன்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன்.
கைது நடவடிக்கை என்றவுடன்ஊழலில் ஊறித் திளைத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோரும் நீதிமன்றம் சென்று நிம்மதி அடைந்தனர். ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு கூட செந்தில் பாலாஜியை சிறைப்படுத்தி விசாரிக்க இயலாத நிலை உள்ளது.
இதோ தற்போதும் நீதிமன்றம் வழியே உதயநிதி உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்ற உத்திரவை பெறுகின்றனர். இந்த ரீதியில் நீதி பரிபாலன அமைப்பு முறையை செல்வாக்கானவர்கள் தங்களுக்கானதாக மாற்றிக் கொள்ளும் வரையில் நியாயங்களை நிலை நாட்டுவது அரிதினும் அரிது.











கருத்துகள்