தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகத்தைத் திறந்து வைத்த இணை அமைச்சர்
மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு, உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகத்தைத் திறந்து வைத்தார். மரபணு மாற்றப்பட்ட பயிர் புரட்சியில் இது ஒரு மைல்கல் என்று அமைச்சர் கூறினார்.
பிரிக்-தேசிய வேளாண் உணவு உயிரி உற்பத்தி நிறுவனத்தில் நடைபெற்ற, உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட கிரீன் ஃபோர்ஜ் மையம், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பரிசோதனை செய்யவும், வெவ்வேறு பகுதிகளுக்கு அவற்றின் பொருத்தத்தை மதிப்பிடவும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்றும் கூறினார்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வளர்ப்பதற்கும் பரிசோதனை செய்வதற்கும் உகந்த சூழலை உருவாக்குவதற்காக, ஒளி, ஈரப்பதம், வெப்பநிலையின் அளவு, உருவகப்படுத்துதல் ஆகிய அம்சங்கள் கொண்ட அறைகளை கிரீன் ஃபோர்ஜ் வழங்குகிறது என்று அவர் கூறினார். இந்தத் திறன், ஒரு குறிப்பிட்ட பயிர் வெவ்வேறு சுற்றுச்சூழல் நிலைகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ளவும், அதற்கேற்ப அதை மதிப்பிடவும் உதவும் என்றும் அவர் கூறினார்
அமைச்சர் இந்த நிறுவனத்தின் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த நிறுவனம் இந்தியாவின் உயிரித்தொழில்நுட்பப் புரட்சிக்கு, குறிப்பாக வேளாண் உயிரித்தொழில்நுட்பத் துறையில், முன்னோடிகளில் ஒன்றாக உருவெடுக்கும் என்று கூறினார்.




கருத்துகள்