போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் மூலம் 29 கோடி மக்களிடம் விழிப்புணர்வு!
இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றும் நோக்கில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 2020 ஆகஸ்ட் 15-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 29.32 கோடிக்கும் அதிகமான மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். இதில் 11.20 கோடி இளைஞர்களும், 7.92 கோடி பெண்களும் அடங்குவர். கல்வி நிறுவனங்களில் 21 லட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 768 மறுவாழ்வு மையங்கள் மற்றும் அடிமைத்தனம் ஒழிப்பு மையங்கள் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 8.20 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 2020-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 294 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயனாளிகள் உதவி பெற 14446 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம். மேலும், ‘NMBA ஆப் 2.0’ செயலி மூலம் நிகழ்நேரப் புகார்களும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன. ‘நஷா முக்தி மித்ரா’ திட்டத்தில் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்களாகப் பணியாற்றலாம் என்று அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. அரசு மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே ஆரோக்கியமான, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார் கூறியுள்ளார்.





கருத்துகள்