இலங்கை இந்தியா இருநாடுகளின் ராஜ்ஜிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கின் இலங்கைப் பயணம் பார்க்கப்படுகிறது!
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 8 முதல் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை தலைநகர் கொழும்புக்குப் புறப்படுகிறார்! இதற்கு முன்பு
1988ல் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கேசி பந்த் கொழும்பு சென்றார்! இதைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இலங்கை செல்வது கடந்து 38 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.சீனா வழங்கியுள்ள கடனை இலங்கை அரசால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹம்பன்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது இலங்கை. சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் இந்த துறைமுகம், அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது.இலங்கை துறைமுகத்தில் இருந்து சீனாவின் உளவு கப்பல், இந்தியாவை உளவு பார்ப்பதாக இந்தியா சந்தேகம் அடைந்து வருகிறது. இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என எண்ணுகிறது.
இந்த நிலையில்தான் இலங்கை உடனான உறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
இவர் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே-வை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.அதன்பின் இலங்கை அதிபர் அனுர குமார திசனாயகே "இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எங்கள் மண்ணை பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம்" என்று உறுதி அளித்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்கான L70 ரக பீரங்கிகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு (NDC) இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டதாக இந்திய பாதுகாப்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரலாற்றுப் பூர்வமாக இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இந்தியாவின் நேரடி ராணுவ பங்களிப்பு அந்நாட்டில் நீண்ட கால அரசியல் வடுக்களை ஏற்படுத்தியதால் இருதரப்பிலும் தலைவர்கள் வெளியேறவு அமைச்சர்கள் துறைச் செயலர்கள் நிலையிலான சந்திப்புகள் தொடர்ந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சக நிலையிலான இலங்கைப் பயணம் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டு வந்தது!
இந்தியப் பெருங்கடலின் சர்வதேசக் கடல்சார் பாதையில் இலங்கை மிக முக்கியமான இடத்தில் உள்ளது!இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்கு யுவான் வாங் போன்ற சீன உணவு மற்றும் ஆய்வுக் கப்பல்களின் வருகை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது! இது தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் ஆந்திரத்தின் ஹரிகோட்டா இஸ்ரோ மையங்களுக்கு மறைமுக அச்சுறுத்தலாக அமையலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை எழுப்பி வருகின்றனர்!இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்தியா அதன் கண்காணிப்பு வலை அமைப்பை விரிவுபடுத்தியுள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்தும் பொறுப்பையும் மேற்கொண்டு ள்ளது. நரேந்திர மோடியின் மகாசாகர் பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர முன்னேற்றம் மற்றும் நட்பு நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கைகள் இதற்கு உதவியுள்ளன!
இலங்கைக்கு இந்தியா வழங்கும் ரோந்து கப்பல்கள் டோர்னியர் உளவு விமானங்கள் மற்றும் கடன் உதவிகள் மூலம் அந்நாடு அதன் ராணுவ பலத்தை வலுப்படுத்த முடியும்! இந்தியாவுக்குத் தனது உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி வாயிலாக உதிரிபாக ஏற்றுமதிச் சந்தை விரிவடைகிறது! மேலும் இரு தரப்புத் தகவல் பகிர்வு மையம் மூலம் கடல் வழிப் பாதைகள் பலப்படுவதோடு இந்திய பெருங்கடலில் அந்நிய நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளை இந்தியா நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்! அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீனா குத்தகைக்கு எடுத்தது போன்ற இலங்கையின் ஒற்றைச் சார்பு நிலையை இந்தியாவின் பொருளாதார உதவிகளும் அதானி குழுமத்தின் கொழும்புத் துறைமுகம் மேற்கு முனைய மேம்படுத்துதல் திட்டமும் மாற்றி அமைத்துள்ளன!
இத்தகைய சூழலில் அமையும் ராஜ நாத் சிங் அவர்களின் பயணத்தின் மூலம் “ஸ்லினெக்ஸ்” எனப்படும் இலங்கை இந்தியக் கூட்டு ராணுவ ஒத்திகைகள் மற்றும் மித்ர சக்தி எனப்படும் கூட்டுறவுப் பயிற்சிகள் வலுப்பெறும்! அத்துடன் திருகோணமலை எண்ணெய்ச் சேமிப்பு வளாகப் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்! இலங்கை முப்படையினருக்கு இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது! அந்த வகையில் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணம் இருதரப்புகளுக்குமான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் மீன்பிடி பிரச்சினையை எல்லை மீறல் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதாமல் மனிதாபிமான வாழ்வாதாரப் பிரச்சனையாக கையாள இது வழி வகுக்கலாம்! மேலும் இருநாட்டுக் கடலோரக் காவல் படைகளுக்கு இடையே உடனடித் தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் தவறான புரிதலால் மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கலாம் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.






கருத்துகள்